கோலாலம்பூர்:
வெறும் 38 காசு செலவாகக் கூடிய ஒரு தட்டு வெறும் சோற்றிற்கு 3 ரிங்கிட் 50 காசுகள் வசூலிப்பது குறித்து ஒரு உணவு விநியோக APPS மீது பெரும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, நெல் மற்றும் அரிசி நிர்வாக கட்டுப்பாட்டுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் மாமூட் கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளார். “நானும் இந்த Appsஐ சோதித்துப் பார்த்தேன். கிட்டத்தட்ட ஒரு தட்டு வெறும் சோறு 300 விழுக்காடு கூடுதல் விலைக்கு விற்கப்படுவதைக் கண்டறிந்தேன்” எனவும், “வியாபரிகள் வெறும் சோற்றின் விலையை இப்படி உயர்த்தக்கூடாது” எனவும் வேதனை தெரிவித்தார்.
“10 கிலோ உள்ளூர் அரிசி 38 ரிங்கிட் என்ற கணக்கில் எடுத்துக் கொண்டால், அதிலிருந்து ஒரு வியாபாரி சுமார் 100 தட்டு சோற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும், இவ்வாறாயின் ஒரு தட்டு சோற்றின் விலை 40 காசுகளுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும்” என்று அவர் சொன்னார்.
“Apps மூலமான விற்பனையை வணிகர்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்த வேண்டாம், ஏனென்றால் மக்களின் வாழ்க்கைச் செலவை சமாளிக்க அரசாங்கமும் பல மானியங்களை செயற்படுத்தி வருகிறது ” என்று அவர் நேற்று ஓர் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்தார்.
அண்மையில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் விசாரணைக்கு அழைப்பு விடுத்ததை அடுத்தே இவரது கருத்துக்களும் வெளிவந்துள்ளன.
வெறும் சோற்றிற்கே இப்படி அநியாய விலை இருக்குமாயின், ஏனைய உணவுப்பொருட்களுக்கு விதிக்கப்படும் விலை எப்படி இருக்கும் என சமூகவலைத்தளங்களில் கடுமையான கருத்துக்கள் பறக்கின்றன.