கோவை, வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தை நடத்தி வருபவர்தான் சத்குரு. சமீபத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவில் கூட பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். கடந்த நான்கு வாரங்களாகவே அவருக்கு தலைவலி இருந்து வந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி தலைவலி உச்சத்தை அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் உடனடியாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டதில், மூளைப் பகுதியில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். தற்போது அவர் நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து சத்குருவுக்கு வைக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் அகற்றப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், சத்குரு விரைவில் குணமடைய வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இந்த விஷயம் குறித்து அறிந்ததிலிருந்து நான் உணர்ச்சியற்றவளாக இருக்கிறேன்.
இந்த கடுமையான வலியுடன் சத்குரு ஜி, பிரம்மாண்டமான சிவராத்திரி நிகழ்வை தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல் எந்தவொரு கூட்டத்தையும் அல்லது சந்திப்பையும் கூட தவிர்க்கவில்லை. விரைவில் குணமடையுங்கள். நீங்கள் இல்லாமல் நாங்கள் ஒன்றுமில்லை என தெரிவித்துள்ளார். “கடவுளுக்கே இந்த நிலையா” சத்குரு உடல்நிலை குறித்து நடிகை கங்கனா வருத்தம் தெரிவித்திருப்பது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.