நைஜீரியாவில் பிணைக் கைதிகளாக இருந்த 300 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு

அபுஜா:

இம்மாத தொடக்கத்தில் நைஜீரியாவின் வடக்குப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் துப்பாக்கிக்காரர்களால் கடத்தப்பட்டனர்.

பிணைக் கைதிகளாக இருந்த அவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக நைஜீரிய அரசாங்கம் நேற்று (மார்ச் 24ஆம் தேதி) தகவல் வெளியிட்டது.

மார்ச் 7ஆம் தேதி குரிகா என்னும் இடத்தில் 287 பள்ளி மாணவர்களும் சில ஆசிரியர்களும் துப்பாக்கிக்காரர்களால் கடத்தப்பட்டனர்.

பிணையில் இருப்பவர்களை விடுவிக்க கிட்டத்தட்ட 100,000 வெள்ளி தர வேண்டும் என்று துப்பாக்கிக்காரர்கள் நைஜீரிய அரசாங்கத்தை மிரட்டினர்.

இந்தச் சம்பவம் நைஜீரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த நாட்டில் இவ்வளவு பெரிய அளவில் ஆட்கடத்தல் சம்பவம் இடம்பெற்றது இதுவே முதல்முறை.

இந்நிலையில் துப்பாக்கிக்காரர்கள் கொடுத்த கெடு முடிவதற்குள் மாணவர்களும் ஆசிரியர்களும் எந்த பாதிப்பும் இல்லாமல் மீட்கப்பட்டனர்.

மாணவர்கள் காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாகவும் தற்போது அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு மாணவர்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

நைஜீரியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் போக்கோ ஹராம் என்னும் பயங்கரவாத அமைப்பு முதல் முறையாக பள்ளி மாணவர்களை குறிவைத்து ஆட்கடத்தலில் ஈடுபட்டது.

அதைத் தொடர்ந்து நைஜீரியாவில் உள்ள சட்டவிரோத அமைப்புகளும் இதே பாணியில் மாணவர்களைக் கடத்தி அரசாங்கத்தை மிரட்டி வரும் போக்கு அதிகரித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here