சுவா: ஆஸ்திரேலியாவுக்கு வடகிழக்கு பகுதியில் உள்ள பிஜி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. வானுட்டு தீவுகளுக்கு அருகில் இருக்கும் இந்த தீவில் நிலநடுக்கம் ஏற்படுவது சுனாமி உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. பிஜியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் புவியின் டெக்டானிக் பிளேட்கள் நகர்ந்ததால் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.
இருப்பினும் நிலநடுக்க அளவுகோலில் இது சக்தி வாய்ந்தது என பதிவாகியுள்ளதால் சுனாமி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இதற்கு முன்னர் இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ரிக்டர் அளவில் 7.5ஆக நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி உருவானது. இதில் சுமார் 4,300க்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர்.
தென் பசிபிக் கடலில் அமைந்துள்ள இந்த தீவுக்கு அருகில்தான் வானுட்டு தீவுகள் இருக்கின்றன. இந்த வானூட்டு நாடு என்பது சுமார் 80 சிறிய தீவுகளை கொண்டிருக்கிறது. இந்த தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். இதனால் சுனாமி உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டு பொருட் சேதமும் உயிர் சேதமும் அடிக்கடி ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
எனவே உலக அளவில் அதிக அளவு பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாடுகளில் இந்த வானூட்டு தீவுகள் முன்னிலையில் இருக்கின்றன. பிஜி தீவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முழுமையாக தகவல்கள் வெளியாகாத நிலையில், தீவில் உள்ள மக்கள் சமூக வலைத்தளங்களில் இந்த பாதிப்புகளை பகிர்ந்து வருகின்றனர்.