வீடுடைத்து திருட்டு; முன்னாள் கைதி ஒருவர் கிளந்தானில் கைது

கோத்தா பாரு:

கோத்தா பாரு, கம்போங் தாசெக் மஹ்லிகை பச்சோக்கில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் கைதி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு முன்னைய எட்டு குற்றப்பதிவுகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பதிவுகளும் உள்ளன என்று, பச்சோக் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் இஸ்மாயில் ஜமாலுடின் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை (மார்ச் 28) மாலை 5.30 மணியளவில், தனது வீட்டின் சமையலறையின் ஜன்னல்கள் மற்றும் இரும்பு கிரில்கள் திறந்து கிடப்பதாக ஒருவரிடமிருந்து காவல்துறைக்கு புகார் கிடைத்தது.

புகார்தாரரின் சோதனையில், அவரது வீட்டில் பல பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது.

சம்பவ இடத்திலிருந்து மூன்று கைரேகை பதிவுகளையும் போலீசார் வெற்றிகரமாக மீட்டனர்.

இதைத் தொடர்ந்து, 44 வயதுடைய சந்தேக நபர் ஓட்டிச் சென்ற காரில் புகார்தாரரின் உடைமைகள் என்று நம்பப்படும் பல பொருட்களைக் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்தனர்.

“கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் ஒரு தொலைக்காட்சி பெட்டி, மின்விசிறி, மின்சார கெட்டில், அரிசி குக்கர், தண்ணீர் பம்ப் மற்றும் சந்தேக நபர் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு ரம்பம் ஆகியவை அடங்கும்,” என்று அவர் கூறினார்.

சந்தேக நபர் மெத்தம்பேட்டமைன் பாவித்து இருப்பது உறுதியானது.

அந்த நபர் வீடு உடைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாகவும், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 457, சிறு குற்றச் சட்டம் பிரிவு 29 (1) மற்றும் பிரிவுகளின் கீழ் விசாரணைக்காக இன்று முதல் இரண்டு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here