கோலாலம்பூர் :
அண்மையில் காவலாளி ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட 5 இலட்சம் ரொக்கம் கொண்ட கைப்பெட்டியின் சொந்தக்காரர் என நம்பப்படும் நபர் ஒருவர் காவல்துறையிடம் ஆஜரானார்.
இந்த விவகாரத்தை பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை அதிகாரி துணை ஆணையர் ஷஹ்ருல் நிஸாம் ஜாஃபர் இஸ்மாயில் உறுதிப்படுத்தினார்.
“நேற்று மாலை 4.30 மணிக்கு அவர் வாக்குமூலம் அளித்தார் என்றும், இது தொடர்பில் இன்னும் கூடுதல் வாக்குமூலங்களையும் சான்றுகளையும் பெற வேண்டியுள்ளது,” என்றார் அவர்.
முன்னதாக, அந்தக் கைப்பெட்டியைப் பெற்றுக்கொள்ள நிறுவனம் ஒன்று முன்வந்ததாகவும் ஷா ஆலமில் காவல்துறையிடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது என்றும் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசேன் உமர் கான் தெரிவித்தார்.
எனினும், அழைப்பாணை விடுக்கப்பட்டபோது அந்த நிறுவனத்தின் இயக்குநர் டாமான்சாரா காவல் நிலையத்தில் ஆஜராகத் தவறிவிட்டார் என்று அவர் சொன்னார்.
அந்தக் கைப்பெட்டிக்குச் சொந்தக்காரர் தாம்தான் என்பதை நிரூபிக்கவும் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறவும் அந்த இயக்குநர் காவல் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என்று ஆணையர் ஹுசேன் கூறினார்.