சனி மகா பிரதோஷத்தன்று இந்த 5 பொருட்களை வாங்கிக் கொடுங்க.

அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கி, வாழ்வில் சந்தோஷத்தை மட்டுமே வழங்கக் கூடிய அதிஅற்புதமான வழிபாட்டு காலம், பிரதோஷ காலமாகும். சிவ பெருமான், ஆலகால விஷத்தை உண்டு, தேவர்களை காத்து, அருள் செய்து, ஆனந்த நடனம் ஆடிய வேளையே பிரதோஷ காலமாகும். நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே சிவ பெருமான் நடனமாடியதாக சொல்லப்படுதால், நந்தியின் கொம்புகளுக்கு இடையில் சிவனை தரிசனம் செய்வது சிறப்பானதாகும்.

ஜாதகத்தில் எந்த கிரகம் சரியில்லை என்றாலும், எந்த திசை நடந்தாலும் சரி, வாழ்வில் என்ன கஷ்டமாக இருந்தாலும் சரி பிரதோஷத்தன்று சிவன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் அனைத்தும் நீங்கி விடும். சனிக்கிழமையில் வரும் சனி பிரதோஷத்தன்று விரதம் இருந்து, சிவ தரிசனம் செய்தால் அனைத்து விதமான பாவங்களும் நீங்கி விடும் என்பது ஐதீகம். சிவ நாமங்களை சொல்லி வழிபட்டால் சிவனின் அருள் முழுவதுமாக கிடைக்கும்.

பிரதோஷ வழிபாடு :

சிவபெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் ஒன்று பிரதோஷ விரதம் ஆகும். ஒவ்வொரு மாதமும் வரும் திரியோதசி திதியை சிவ வழிபாட்டிற்குரியதாக சொல்கிறோம். திரியோதசி திதியில் மாலை 04.30 மணி முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். சிவ பெருமானின் அருளை முழுமையாக பெற வேண்டும் என்கிறவர்கள் பிரதோஷத்தன்று விரதம் வழிபட்டாலே போதும். பிரதோஷ விரதம் சிறப்பானது என்றாலும் ஒரு குறிப்பிட்ட மாதங்கள், கிழமைகளில் வரும் போது கூடுதல் சிறப்பு பெறுகிறது.

பிரதோஷங்களில் திங்கட்கிழமையில் வரும் சோமவார பிரதோஷமும், சனிக்கிழமையில் வரும் சனிப்பிரதோம் மிகவும் விசேஷமானவை. அதிலும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தை சனி மகாபிரதோஷம் என சிறப்பித்து சொல்கிறோம். ஒரு சனி மகா பிரதோஷத்தன்று விரதம் இருந்து, சிவனை வழிபட்டால் 5 ஆண்டுகள் சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்ட பலனை பெற முடியும். சனிப் பிரதோஷத்தன்று சிவ பெருமானையும், சனீஸ்வரனையும் விரதம் இருந்து வழிபட்டால் கிரக தோஷங்கள், சனியால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் நீங்கி விடும்.

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த சனி மகா பிரதோஷம் இந்த ஆண்டு ஏப்ரல் 06ம் தேதி வருகிறது. இது 25 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அரிதான சனி மகா பிரதோஷம் என சொல்லப்படுகிறது. ஏப்ரல் 06ம் தேதியன்று காலை 7.41 மணி துவங்கி, ஏப்ரல் 07ம் தேதி காலை 03.47 வரை உள்ளது திரியோதசி திதி உள்ளது. இதனால் ஏப்ரல் 06ம் தேதி நாள் முழுவதும் சனிபிரதோஷ விரதத்தை இருக்கலாம்.

அதிகாலையில் எழுந்து நீராடி, நெற்றியில் திருநீறு பூசி, சிவ நாமங்களை உச்சரித்தபடி இருக்க வேண்டும். பகல் முழுவதும் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருக்க வேண்டும். முழுவதும் உபவாசமாக இருக்க முடியாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று, நந்தி தேவரையும், சிவ பெருமானையும் வழிபட்டு, அதற்கு பிறகு அங்கு தரும் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

இந்த நாளில் 5 பொருட்களை சிவன் கோவிலில் நடக்கும் பிரதோஷ பூஜைக்கு வாங்கிக் கொடுத்தால் கேட்ட வரங்கள் கிடைக்கும். நினைத்தது நடக்கும். குடும்பம் செழிப்படையும். பிரதோஷத்தின் போது நந்திக்கு நடக்கும் அபிஷேகத்திற்கு இளநீர், பசும் பால், தயிர் ஆகியவற்றை வாங்கிக் கொடுக்கலாம். இந்த பொருட்களால் நந்திக்கு அபிஷேகம் செய்யும் போது அவரின் உடல் எப்படி குளிருமோ அதே போல் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் துயரங்கள் நீங்கி, செழிப்படையும். அதற்கு பிறகு நந்திக்கும், சிவனுக்கும் நடக்கும் அர்ச்சனைக்கு வில்வம் வாங்கிக் கொடுக்கலாம். அபிஷேகம், அலங்காரங்கள் முடிந்த பிறகு சிவனுக்கு அணிவிக்க தாமரைப்பூ வாங்கிக் கொடுக்கலாம்.

பொதுவாக தாமரை பூ, சிவனுக்கு விருப்பமான மலர்களில் ஒன்று. சிவனுக்கு தாமரை பூ படைத்து வழிபட்டால் வேண்டிய வரங்களை அள்ளி அள்ளி கொடுப்பார். அதுவும் சனிப் பிரதோஷத்தன்று சிவனுக்கு தாமரை படைத்து வழிபட்டால் நீங்கள் வேண்டிய வரங்கள் கிடைக்கும். ஒரு சனிப்பிரதோஷ விரதம் மற்றும் வழிபாட்டு முறைகளை முறையாக கடைபிடித்தால் 120 சனிப் பிரதோஷ விரதம் இருந்த பலன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இந்த 5 பொருட்களையும் வாங்கிக் கொடுக்க முடியாதவர்கள், இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது வாங்கிக் கொடுக்கலாம். இதனால் சிவனின் முழு அருளும் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here