(பி.ஆர். ராஜன்)
புத்ரா ஜெயா:
ஜோகூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த பி40 பிரிவு இந்தியத் தொழில் முனைவோருக்கு உதவிடும் வகையில் 20 லட்சத்து 74 ஆயிரத்து 950 ரிங்கிட் நிதியை மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) ஒதுக்கியிருக்கிறது.
பிரதமர் இலாகா கீழ் வைக்கப்பட்டிருக்கும் மித்ரா, இந்தியத் தொழில் முனைவோர்களின் மைக்ரோ, சிறு, நடுத்தர வணிகங்களை (PMKS) விரிவுபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்த நிதியை வழங்குவதற்கு மித்ரா திட்டமிட்டுள்ளது.
12ஆவது மலேசியத் திட்டத்தில் வரையறுக்கப்பட்டிருப்பதுபோல் பி40 இந்தியத் தொழில் முனைவோர்களின் வருமானத்தை அதிகரிக்கச் செய்வதற்கு இந்த நிதி உதவி வழங்கப்படும் என்று இங்கு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் மித்ரா தெரிவித்தது.
2022ஆம் ஆண்டு சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேசம் கோலாலம்பூரில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தின் தொடர்ச்சியாக இது அமைகின்றது. ஜோகூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 18 முதல் 60 வயது வரையிலான தொழில்முனைவோர்கள் இந்த நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த உதவிக்குத் தகுதி பெறுவதற்கு ஒரு குடும்பத்தின் மொத்த வருமானம் 4,850 ரிங்கிட்டிற்கு மேற்போகாமல் இருக்கவேண்டும். இதுவரை மித்ரா நிதி உதவி பெற்றிராதவர்கள், உடற்பேறு குறைந்தவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள் ஆகியோருக்கு இந்த உதவித் திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும்.
ஜோகூர் மாநில இந்திய வணிகர்கள் சபை (JICCI), பினாங்கு வர்த்தக சபை (MICCI PENANG), நெகிரி செம்பிலான் வர்த்தக சபை (NS ICCI) ஆகியவற்றின் ஒத்துழைப்போடு மித்ரா இந்த நிதி உதவித் திட்டத்தை மேற்கொள்ளும்.

இதன்வழி இந்தத் தொழில் முனைவோர்கள் நேரடியான நிதி உதவியைப் பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. அதேசமயத்தில் ஆன்லைன் வழி விண்ணப்பம் செய்ய விரும்புகின்றவர்கள் 2024 ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி மே 12ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்யலாம்.
1. Johor: https://short.at/wzL25
2. Pulau Pinang: https://shorturt.at/agil3
3.Negeri Sembilan: https//shorturl.at/bcrS0
என்ற மாநில வாரியான வலைத்தளங்களில் விண்ணப்பம் செய்யலாம்.



















