கோலாலம்பூர்:
மலேசியாவில் மக்கள் தொகை சுமார் 3.3 கோடி. இந்த மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் சாலை விபத்துகள், அவற்றால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை கதிகலங்க வைக்கின்றன.

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சாலைப் போக்குவரத்து அமலாக்கப் பிரிவு வெளியிட்டிருக்கும் தரவுகளின்படி 2023 ஜனவரி ஒன்று தொடங்கி டிசம்பர் 30 வரை 6 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன.இவற்றுள் 6 ஆயிரம் மரணங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

உலக நாடுகளில் மிக அதிகமான சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் நிகழும் ஒரு நாடாக மலேசியா விளங்குகிறது. இந்த விபத்துகளுக்கு யார், என்ன காரணம் என்பதை அலசி ஆராய்ந்து அவற்றைத் தடுப்பதற்குரிய அல்லது குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பில் அரசாங்கம் இருக்கிறது.

சாலைகளில் ஒருவரது மதம், சமயம், இனம், நிறம், தொழில், வயது பார்த்து விபத்து நிகழ்வதில்லை. ஆண்டு முழுவதும் சாலைப் பாதுகாப்பு, விழிப்புணர்வு இயக்கங்கள்– பிரச்சாரங்கள் ஒவ்வொரு நாளும் நடத்தப்பட்டாலும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியவில்லை. மரண எண்ணிக்கைகளையும் குறைக்க முடியவில்லை.



















