ஹெல்மெட் போடாமல் புல்லட் ரைட் சென்று நடிகை பவித்ரலக்ஷ்மி வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமென்ட் செய்து வருகின்றனர்.
சின்னத்திரையில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபல மானவர் நடிகை பவித்ரலக்ஷ்மி. பிறகு தமிழில் ‘நாய் சேகர்’ என்ற படத்திலும் மலையாளத்தில் ‘உல்லாசம்’ என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு சில படங்களிலும் கதாநாயகியாக அவர் நடித்திருந்தாலும் பெரிதாக பெயர் சொல்லிக் கொள்ளும்படியான ஹிட் எதுவும் அமையவில்லை.
இப்படியான சூழ்நிலையில்தான் பவித்ரா புல்லட் ஓட்ட வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி உள்ளார். இந்த வீடியோவைத் தனது சமூகவலைதளப் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதில், “புல்லட் ஓட்ட வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. எனது நண்பர்கள், கசின்ஸ் எனப் பலரிடமும் கற்றுக்கொடுக்க சொல்லி கேட்டிருந்தேன். ஆனால், அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு நேரமும் பொறுமையும் இல்லை.
ஆனால், மூன்று நாட்கள் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டேன். எதையோ சாதித்தது போன்ற உணர்வு இருக்கிறது” எனக் கூறியுள்ளார். பவித்ரலக்ஷ்மி பகிர்ந்துள்ள வீடியோவில் ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டி இருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் சென்னை போக்குவரத்து காவல்துறையை டேக் செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி கமென்ட் செய்து வந்தனர்.
இதனால் பதறிப்போன பவித்ரலக்ஷ்மி, ‘நான் வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ளும் போது ஹெல்மெட் அணிந்திருந்தேன். ஆனால், இந்த வீடியோவை ஷூட் செய்யவதற்காக பத்து நிமிடங்கள் ஹெல்மெட் போடாமல் எடுத்தேன்’ என விளக்கம் கொடுத்து இருக்கிறார்.