2024-2027க்கான மஇகா தனது கட்சித் தேர்தல் ஏப்ரல் 27 முதல் ஜூலை 7 வரை நடைபெறும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மஇகா இளைஞர், வனிதா புத்ரா மற்றும் புத்ரி ஆகியவற்றின் தலைவர்களுக்கான வேட்பாளர் நியமனம் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறும் என்றும், அதன்பின் மே 4 மற்றும் 5ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.
தேசிய அளவில் MIC Putera மற்றும் MIC Puteri க்கான வேட்பாளர்களின் நியமனம் ஜூன் 8 ஆம் தேதி நடைபெறும். அதைத் தொடர்ந்து ஜூன் 15 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். இதற்கிடையில், பிரிவு தலைவர்களுக்கான வேட்பாளர்களின் நியமனம் மே 10, 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெறும். அதைத் தொடர்ந்து மே 17, 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று இன்று மஇகா தலைமையகத்தில் மத்திய செயற்குழு (CWC) கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மத்திய மற்றும் மாநில அளவில் கட்சியின் உயர்மட்டக் குழுவிற்கு வேட்பாளர்கள் நியமனம் ஒரே நேரத்தில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜூலை 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் தேர்தல்கள் நான்கு மணி நேரத்திற்குள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். விக்னேஸ்வரன், இந்தப் பதவிக் காலத்திற்கான கட்சிக் குழுத் தேர்தல், பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் நடத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
அதே நேரத்தில் கட்சியில் டத்தோஸ்ரீ எம் சரவணனே கட்சியின் துணைத் தலைவராகத் தொடர விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, மார்ச் 26 அன்று, விக்னேஸ்வரன் மஇகா தலைவர் பதவியை 2024-2027 காலத்திற்கான கட்சித் தேர்தலில் போட்டியின்றி மூன்றாவது முறையாக பதவியை தக்க வைத்து கொண்டார்.
இதற்கிடையில், கோல குபு பாரு மாநில இடைத்தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த அவர், இடைத்தேர்தலில் போட்டியிடும் ஒற்றுமை அரசாங்கத்தின் எந்தவொரு வேட்பாளரையும் மஇகா ஆதரிக்கும் என்றார். 58 வயதான லீ கீ ஹியோங் புற்றுநோயால் மார்ச் 21ஆம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து கோல குபு பாரு மாநில இடைத்தேர்தல் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏப்ரல் 27ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்றும், முன்கூட்டியே வாக்குப்பதிவு மே 7ஆம் தேதி என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.