துபாய்:
நேற்று பெய்த வரலாறு காணாத கனமழையால் துபாய் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் அனைத்துலக விமான நிலையத்தின் ஓடுபாதை சமுத்திரம் போல் காட்சியளித்தது. இதனால் விமான சேவைகள் வெகுவாக தடைபட்டன.
மேலும் துபாயின் பிரபல அடையாளங்களான துபாய் மால், எமிரேட்ஸ் மால் ஆகிய இரு வணிக வளாகங்களுக்கும் மழை நீர் புகுந்தது. அங்குள்ள மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டன.
ஓராண்டில் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததாகவும், 12 மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என்றும், அரேபிய தீபகற்ப பகுதியைக் கடந்து சென்ற மிகப் பெரிய புயலே இந்த பெருமழைக்குக் காரணம் என்றும் இந்த நிலை ஏற்பட்டதாக துபாய் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
இந்நிலையில் துபாயில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.