கோலாலம்பூருக்குக் குறுகிய கால வருகை மேற்கொண்டிருக்கும் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் மேதகு செந்தில் தொண்டைமான் மரியாதை நிமித்தமாக ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரனை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் மலேசியா – இலங்கை ஆகிய இரண்டு நாடுகளிலும் உள்ள தமிழர்கள், அவர்களின் நல்வாழ்வு, சவால்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
பரஸ்பர உறவுகள், தமிழர் சார்ந்த நலன்கள் குறித்தும் இவர்கள் பேசினர்.

குறிப்பாக இரண்டு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுக்கிடையிலான இரு வழி வர்த்தக வாய்ப்புகள், கல்வி சார்ந்த முன்னெடுப்புகள், அரசியல் சூழல் என பல விஷயங்களும் பேசப்பட்டன.
இந்த சந்திப்பின் போது மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் உடனிருந்தார்.
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் ஆகிய இரண்டு தலைவர்களுக்கும் செந்தில் தொண்டைமான் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். தொடர்ந்து டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநருக்கு சால்வை அணிவித்து கெளரவித்தார்.
























