தமிழகத்திற்கு தினமும் 1 டி.எம்.சி. நீர் திறந்துவிட வேண்டும்,: கர்நாடகா அரசுக்கு உத்தரவு

சென்னை :

மிழகத்திற்கு இம்மாதம் இறுதிவரை நாள்தோறும், 1 டி.எம்.சி., நீர் திறக்கும்படி, கர்நாடகாவிற்கு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவு, காவிரி மேலாண்மை ஆணையம் வாயிலாக முறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.19 டி.எம்.சி., நீரில், 2.25 டி.எம்.சி., மட்டுமே கிடைத்தது.

இம்மாதம், 31.2 டி.எம்.சி., நீர் திறக்க வேண்டிய நிலையில், 9ம் தேதி வரை, 1.99 டி.எம்.சி., மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, நடப்பாண்டு நிலுவை நீரின் அளவு, 14 டி.எம்.சி.,யாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று நடந்தது.

வினீத் குப்தா தலைமையில் நடந்த கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில், காவிரி தொழிற்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார் பங்கேற்றனர்.

‘மேட்டூர் அணையில், 12.9 டி.எம்.சி., மட்டுமே நீர் உள்ளது. இதிலிருந்து குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. விரைவில் அணை வறண்டு விடும் கட்டத்தில் உள்ளது. எனவே, குடிநீர் தேவைக்காக, நிலுவை நீரை விடுவிக்க வேண்டும்’ என, தயாளகுமார் வலியுறுத்தினார்.

அதை பரிசீலித்த காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் தலைவர், தமிழகத்திற்கு இம்மாதம் இறுதி வரை நாள்தோறும், 1 டி.எம்.சி., நீர் திறக்க உத்தரவிட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here