பெய்ஜிங்:
யூடியூப் சேனலில் அதிக லைக்ஸ்களையும் ஷேர்களையும் பெற வேண்டும் என்ற நோக்கில் லைவ் வீடியோவில் அளவுக்கு அதிகமான உணவுகளை உட்கொண்ட சீன பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், தனது யூடியூப்பை பிரபலப்படுத்தவும் சம்பாதிக்கவும் உயிரையும் பணயம் வைத்த அவர் நிலைக்கு இறுதியில் தன் உயிரையே இழந்துவிட்டார் என்பது வேதனையான விஷயமாகும்.
இளைஞர்கள் ஆன்லைன் மோகத்தில் சிக்கி சீரழிந்து வருகிறார்கள். எதற்கெடுத்தாலும் ஆன்லைன்! அத்துடன் செல்பி என்ற பெயரில் ஆபத்தான இடங்களில் புகைப்படம் எடுத்து கடைசியில் உயிரையே விடும் அளவுக்கு செல்கிறார்கள்.
அதிலும் யூடியூப் சேனல் என்ற பெயரில் இவர்கள் செய்யும் சம்பவங்கள் அதிர வைக்கின்றன. வேகமாக வாகனத்தை இயக்குவது, சாகசம் செய்வது, ஆபத்தான சுற்றுலா தலங்களுக்கு செல்வது, டிரெக்கிங் உள்ளிட்டவைகளை செய்து சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.
இவையெல்லாமே பாலோயர்களின் லைக்குகளையும் கமென்ட்டுகளையும் அதன் மூலம் வைரலானால் பணம் சம்பாதிக்கவும் இத்தனை மெனகெடல்களை செய்கிறார்கள். அந்த வகையில் சீனாவில் பிரபல பெண் யூடியூபர், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிராவல் விலாக், ஃபுட் விலாக் என்ற வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், இவர்கள் இது போன்ற வீடியோக்கள பதிவேற்றி வருகிறார்கள்.
அவ்வாறு உணவு வீடியோக்களை பதிவேற்றம் செய்து பிரபலமானர் பான் ஜியோடிங் என்ற பெண் ஆவார். இவர் உணவு ரிவ்யூ செய்வது, உணவுகளை அதிகமாக சாப்பிடுவது உள்ளிட்டவைகளை செய்து வந்தார்.
இது போல் அதீதமாக உணவுகளை உட்கொண்டதால் அவருடைய உடல் எடை அதிகரித்தது. இதனால் அவர் 120 கிலோ எடை கொண்டிருந்தார். அண்மையில் கூட அவருக்கு உணவு செரிமான கோளாறு ஏற்பட்டது. அதற்கான சிகிச்சையையும் எடுத்துக் கொண்டார். அப்படியிருந்தும் மருத்துவமனையிலிருந்து வெளியான சில நாட்களிலேயே உணவு சேலஞ்ச் என்ற லைவ் வீடியோவை தனது சேனலில் செய்தார்.
சுமார் 10 கிலோ எடையுள்ள உணவுகளை அவர் தொடர்ந்து சாப்பிட்டு லைவ் செய்தார். அப்போது திடீரென லைவிலேயே மயங்கி விழுந்து இறந்தார். அவர் அதிகமான உணவுகளை சாப்பிட்டதும் அவை செரிக்காமல் இருந்ததுமே அவருடைய இறப்புக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த பெண்ணுக்கு 24 வயதுதான் ஆகிறது. ஜூன் 14 ஆம் தேதி இறந்த அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது வயிறு சிதைந்துவிட்டதாகவும் செரிமானம் ஏற்படாத உணவுகள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற சவால்களை செய்து இப்படி உயிரை விடுவதன் அவசியம் என்ன என சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்





















