பாரிஸ்: உலகமே வியந்து நோக்கும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக நகரம் அழகுபடுத்தப்பட்டிருக்கும் நிலையில், நகரத்தில் வீடின்றி இருந்த மக்கள் ஆயுதம் தாங்கிய போலீசாரால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான விளையாட்டான ஒலிம்பிக் இந்த முறை பாரிஸில் நடைபெறுகிறது. இது 33வது ஒலிம்பிக் போட்டியாகும். இந்த போட்டி பல வரலாற்று நிகழ்வுகளுடன் தொடங்கியுள்ளது. அதாவது ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்த போட்டியில்தான் ஆண் வீரர்களும், பெண் வீராங்கனைகளும் சம அளவில் பங்கேற்றுள்ளனர். அதாவது மொத்தம் 10,500 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றிருக்கின்றனர். இதில் வீராங்கனைகள் 5,250 பேர், வீரர்கள் 5,250 பேர் உள்ளனர்.
ஏற்கெனவே கடந்த 124 ஆண்டுகளுக்கு முன்னர் இதே பாரிசிஸ் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்தான் முதல் முறையாக பெண்கள் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். போட்டிகளை காண லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. எனவே பாதுகாப்பு பணிகளுக்காக பிரான்ஸ் போலீஸ் மட்டுமல்லாது, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு படையினரும் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். பாதுகாப்புப்படையினர், போலீசார், சிறப்பு அதிரடி படையினர் என மொத்தமாக 40,000 பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
இன்று தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் பிரான்ஸ் அரசு மீது தீவிர குற்றச்சாட்டு ஒன்று எழுந்திருக்கிறது. அதாவது, ஒலிம்பிக் போட்டிக்காக பாரிஸ் நகரத்திலிருந்து வீடற்றவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருப்பது முற்றிலும் தவறானது என்றும், அவர்களுக்கு நிரந்தரமான தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் குரலெழுப்பியுள்ளனர்.
இன்று ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெறும் நிலையில் கடந்த மூன்று மாத காலமாக பாரிஸ் நகரில் தங்கியிருந்த வீடற்றவர்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்திருக்கின்றன. கடைசி கட்டமாக நேற்று மிச்சமிருந்தவர்களையும் ஆயுதம் ஏந்திய பிரெஞ்சு போலீஸ் அப்புறப்படுத்தியுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், “நாங்கள் எங்கு அழைத்து செல்லப்படுகிறோம் என்று தெரியவில்லை. எத்தனை நாட்களுக்கு நாங்கள் அந்த இடத்தில் இருக்க வைக்கப்பட்டிருப்போம் என்றும் தெரியவில்லை. நாங்கள் எங்கள் வாழ்வாதாரங்களை விட்டு துரத்தப்படுகிறோம்” என்று கூறியுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், “நாங்கள் எங்கு அழைத்து செல்லப்படுகிறோம் என்று தெரியவில்லை. எத்தனை நாட்களுக்கு நாங்கள் அந்த இடத்தில் இருக்க வைக்கப்பட்டிருப்போம் என்றும் தெரியவில்லை. நாங்கள் எங்கள் வாழ்வாதாரங்களை விட்டு துரத்தப்படுகிறோம்” என்று கூறியுள்ளார்.
பொது போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தியது, சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு முதலீடு செய்யாமல், நீச்சலுக்காக செய்ன் நதியைச் சுத்தப்படுத்த கோடிக்கணக்கில் செலவு செய்தது என ஏற்கெனவே பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதற்கு மத்தியில், தற்போது வீடற்றவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியிருப்பதும் அவர் மீதான விமர்சனங்களை கூர்மைப்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிக்கு செலவு செய்யும் தொகையில் மிகச்சிறிய தொகையை வீடற்றவர்களுக்கு செலவழித்திருந்தால் அவர்களுக்கு நிரந்தரமாக தங்க வீடு கிடைத்திருக்கும். ஆனால், அதை செய்யாமல் சுற்றுலா பயணிகளுக்காகவும், ஒலிம்பிக் போட்டிக்காகவும் இவர்களை நகரத்தை விட்டு துரத்துவது ஏற்கத்தக்கதல்ல என்று சமூக செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.





















