தானிப்பூர் (உ.பி.): உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலிகார் மாவட்டத்தின் தானிப்பூர் பகுதியில் தொடக்கப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியின் முதல்வர் டிம்பிள் பன்சால் வகுப்பறையில் பாய்விரித்துத் தூங்குவதையும் அவருக்குப் பள்ளி மாணவிகள் ஒவ்வொருவராக வந்து விசிறிவிட்டுத் தூங்க வைப்பதையும் காட்டும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.
அந்தக் காணொளியில், மாணவிகள் ஆசிரியையின் தலைக்கு அருகே உட்கார்ந்து அவருக்கு விசிறிக் கொண்டிருக்கும் காட்சியைக் காணமுடிகிறது. அந்தக் காணொளியைக் கண்ட சமூக ஆர்வலர்களும் பல்வேறு அமைப்பினரும் கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து கல்வி அமைச்சு, அந்த ஆசிரியரிடம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதே ஆசிரியை மாணவர்களை அடிப்பதைக் காட்டும் காணொளி ஒன்றும் வெகுவாகப் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விசாரிக்கப்படும் என்றனர் அதிகாரிகள்.




















