புத்ராஜெயா, மார்ச் 18:
உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN), கடந்த மார்ச் 13 அன்று தலைநகரில் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் RM790,600 மதிப்புள்ள 790 போலி பிராண்டட் கடிகாரங்களைக் கைப்பற்றியுள்ளது.
சுமார் ஒரு மாத கால ரகசியப் புலனாய்விற்குப் பிறகு, புத்ராஜெயா அமலாக்கப் பிரிவினரால் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையிடப்பட்ட இரண்டு அடுக்குக் கட்டிடத்தின் தரைத்தளம் கடிகாரப் பழுதுபார்க்கும் இடமாகவும், மேல் தளம் போலி கடிகாரங்களைச் சேமித்து விற்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. பொதுமக்களின் கண்ணில் படாமல் இருக்க, “தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு” மட்டுமே இந்த விற்பனை ரகசியமாக நடந்துள்ளது.
போலி கடிகாரங்களுடன், பல்வேறு முன்னணி பிராண்டுகளின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பெட்டிகள் மற்றும் காகிதப் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கடிகாரங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என நம்பப்படுகிறது.
இந்தச் சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட 30 வயது மதிக்கத்தக்க உள்ளூர் நபர் (கட்டிடத்தின் மேலாளர்) கைது செய்யப்பட்டுள்ளார்.
KPDN அமலாக்கத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ அஸ்மான் ஆடம் கூறுகையில், “வர்த்தக முத்திரைச் சட்டம் 2019-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. போலிப் பொருட்களை விற்பனை செய்வது சட்டவிரோதமானது மட்டுமல்லாமல், உண்மையான பிராண்ட் உரிமையாளர்களின் உரிமைகளையும் நுகர்வோர் நலன்களையும் பாதிக்கும் செயலாகும். இதில் நாங்கள் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்,” எனத் தெரிவித்தார்.




















