பர்சாலோகோ:
மேற்கு ஆப்ரிக்க நாடான புர்கினா பாசோவில், அல் – குவைதா பயங்கரவாதிகள் கடந்த ஆகஸ்டில் நடத்திய ஒரு மணிநேர தாக்குதலில், 600 பேர் கொன்று குவிக்கப்பட்ட துயரமான சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேற்கு ஆப்ரிக்காவின் மிகவும் ஏழ்மையான நாடு, புர்கினா பாசோ. இங்கு, ராணுவத்துக்கும், ஜே.என்.ஐ.எம்., எனப்படும் அல் – குவைதா வின் துணை பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 2015 முதல் சண்டை நடக்கிறது.
இந்த பயங்கரவாத அமைப்பினர், அண்டை நாடான மாலியில் இருந்து புர்கினா பாசோவுக்குள் ஊடுருவி உள்ளனர்.
இவர்கள், அவ்வப்போது இங்குள்ள மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள, ஒவ்வொரு ஊரிலும் பதுங்கு குழிகளை அமைக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டது.
இந்த பணிகளுக்கு, அந்தந்த ஊர் மக்களையே ராணுவத்தினர் ஈடுபடுத்தினர். ‘இந்த பணிகளில் ராணுவத்துக்கு ஒத்துழைப்பு தந்தால் கொல்லப்படுவீர்கள்’ என்று, ஜே.என்.ஐ.எம்., பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், புர்கினா பாசோவின் பர்சாலோகோ என்ற பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த ஆகஸ்ட் 24ல் பதுங்கு குழிகள் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த ஊருக்குள் இருசக்கர வாகனங்களில் துப்பாக்கிகளுடன் நுழைந்த பயங்கரவாதிகள், பதுங்கு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில், 600க்கும் மேற்பட்டோர் இறந்ததாக பிரான்ஸ் அரசு நேற்று அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இந்த படுகொலை, ஒரு மணி நேரத்துக்குள் நிகழ்ந்ததாகவும் பிரான்ஸ் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூர தாக்குதலில் சிக்கி உயிர் பிழைத்த நபர் கூறுகையில், ‘துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும் பதுங்கு குழிக்குள் ஊர்ந்து சென்றேன். பயங்கரவாதிகள் பதுங்கு குழிக்குள்ளும் இறங்கி அனைவரையும் கண்மூடித்தனமாக சுட்டனர்.
‘இதையடுத்து பதுங்கு குழியிலிருந்து வெளியேறி, அருகே இருந்த புதருக்குள் சென்று ஒளிந்து உயிர் தப்பினேன். இறந்தவர்களின் உடல்கள் அனைத்தையும் மீட்கவே மூன்று நாட்கள் ஆனது’ என்றார்.









