சென்னை: கிங் ஸ்கார்பியன் புரொடக்ஷன் தயாரிக்கும் ‘மலைகளின் இளவரசி’ என்ற படத்தை விஸ்வநாத் கதை, திரைக்கதை எழுதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மற்றும் ராஷ்மி, பூஜா, ஷமிதா, திருமலை அழகன், முத்துலட்சுமி, ஷிவானிகா, செந்தில் குமார், ஸ்வஸ்திகா நடித் துள்ளனர். ராகவா ஹரிகேசவா வசனம் எழுதி, ஒளிப்பதிவு செய்து, வில்லனாக நடித்துள்ளார். சவுமியன் இசையமைப்பில் எஸ்.பி.சிவகுமார், ராகவா ஹரிகேசவா பாடல்கள் எழுதியுள்ளனர். கொடைக்கானல், மூணாறு, ஈரோடு ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் பேசிய திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கே.ராஜன், ‘இசை அமைப்பாளர்கள் தமிழ் வார்த்தைகளுக்கு மரியாதை தர வேண்டும். இசையால் தமிழ் வார்த்தைகளை கொன்றுவிடக்கூடாது. இப்படத்தின் பாடல், டிரைலர் நன்றாக இருந்தது. ‘மலைகளின் இளவரசி’ என்பது அழகான தமிழ் பெயர். இப்போது வரும் பல படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயரிடுகிறார்கள். தமிழுக்கு என்ன பஞ்சமா? அழகிய தமிழில் பெயர்களை சூட்டுங்கள். கதை நன்றாக இருந்தால் மட்டுமே படங்கள் ஜெயிக்கும்’ என்றார்.





















