அமிதாப்பிடம் இருந்து ‘ஏஎன்ஆர் தேசிய விருது’ பெற்ற சிரஞ்சீவி

மறைந்த தெலுங்கு நடிகர் ஏ நாகேஸ்வரராவ் பெயரில் ‘ஏஎன்ஆர் தேசிய விருது’ கடந்த சில வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. 2024ம் ஆண்டுக்கான விருது நடிகர் சிரஞ்சீவிக்கு நேற்று ஹைதராபாத்தில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் அந்த விருதை சிரஞ்சீவிக்கு வழங்கினார்.

விழாவில் நாகேஸ்வரராவ் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர். நாகார்ஜுனா, அமலா, நாக சைதன்யா, அவரது வருங்கால மனைவி சோபிதா துலிபலா உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அமிதாப் எக்ஸ் தளத்தில், “ஏ நாகேஸ்வரராவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு குடும்பத்தினரும், துறையினரும் அஞ்சலி செலுத்தும் போது உணர்வும் ஏக்கமும் நிறைந்த மாலையாக அமைந்தது. அந்தப் பொழுதின் ஒரு பகுதியாக என்னை மாற்றியதற்கு மனமார்ந்த நன்றி நாகார்ஜுனா. சிரஞ்சீவி அவர்களே உங்களுக்கு என்ஆர் விருது வழங்கியதில் எனக்கு பெருமிதம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“அக்கினேனி குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும், அக்கினேனி சர்வதேச அறக்கட்டளையின் உறுப்பினர்களுக்கும், என் அன்பான சகோதரர் நாகார்ஜுனாவுக்கும், எனது சினிமா பயணத்தில் எனது ஒவ்வொரு மைல்கற்களுக்கும் பங்களித்த அனைவருக்கும் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்,” என சிரஞ்சீவி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here