கோலாலம்பூர்:
2021 முதல் 2025 இடையிலான ஐந்தாண்டு காலத்தில் 100 மில்லியன் மரங்கள் நடும் இலக்கை மலேசியா முன்கூட்டியே இன்று எட்டிவிட்டது.

பிரதமர் அன்வார் இப்ராகிம் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) 100 மில்லியன் மரத்தை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தாமான் ஹெர்பாவில் நாட்டினார். இந்த நிகழ்வின்போது, பிரதமரின் துணைவியும் பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் உடனிருந்தார்.
மலேசியாவின் தேசிய ‘மெர்பாவ்’ மரக் கன்றை அன்வார் அங்கு நாட்டினார்.

2021 ஜனவரி 5ஆம் தேதி இந்த மரக்கன்று நடும் பிரசார இயக்கம் தொடங்கியபோது, மலேசிய கூட்டரசின் வனத்துறை, சரவாக் வனத்துறை, சாபா வனத்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அதற்கு ஒத்துழைப்பு அளித்தன. அதேநேரம் பிரசாரத் திட்ட காலத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நாடு முழுவதும் நாட்டப்பட்டன.

இந்த திடடம் மூலம் 18 மில்லியன் ஹெக்டர் வனப்பகுதியை மலேசியா அடைந்து சாதித்துள்ளதாக இயற்கை வளம், சுற்றுப்புற நீடித்த நிலைத்தன்மை அமைச்சு தெரிவித்து உள்ளது. இது நாட்டின் நிலப்பகுதியில் 54.58 விழுக்காடு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.























