சிரியாவில் அதிபர் பதவியிலிருந்து பஷார் அல்-அசாத் கிளர்ச்சியாளர்களால் தூக்கி எறியப்பட்டார். இதனால் அவர் நாட்டைவிட்டு வெளியேறி, தமது குடும்பத்தினருடன் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இந்நிலையில் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கிளர்ச்சிக் கூட்டணி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதில் ஓர் அங்கமாக சிரியாவின் இடைக்கால பிரதமராக முகமட் அல் பஷீரைத் தேர்வு செய்துள்ளனர்.
அடுத்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி வரை பஷீர், பிரதமர் பதவியிலிருந்து சிரியாவில் அமைக்கப்படும் இடைக்கால அரசை வழிநடத்துவார் எனக் கிளர்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறினர்.
“தேசத்தில் நிலைத்தன்மை, அமைதி ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கான நேரம் இது,” என சிரியாவின் இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் முகமட் அல் பஷீர் செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 10) தெரிவித்தார்.
இது இவ்வாறு இருக்க, சிரியாவில் அமையவிருக்கும் புதிய அரசுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அரசியல் செயல்முறை போன்றவற்றை உள்ளடக்கிய சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உலக நாடுகள் அனைத்தும் ஆதரவு வழங்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கேட்டுகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.