கோலாலம்பூர்:
எதிர்வரும் பிப்ரவரி 24 அன்று நடைபெறும் கோலாலம்பூர் ஒற்றுமை அணிவகுப்பு 2024 இல் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது டத்தாரான் மெர்டேக்காவில் மாலை 5 மணிக்குத் தொடங்கி, பசார் செனி, GMBB கிரியேட்டிவ் கொமினிட்டி ஷாப்பிங் சென்டர், ஜாலான் அலோர், லாட் 10 ஷாப்பிங் சென்டர் மற்றும் Berjaya Times Square ஊடாக பயணித்து, லாலாபோர்ட் BBCCயில் முடிவடையும்.
தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகம் மற்றும் கோலாலம்பூர் களியாட்ட சங்கம் ஏற்பாடு செய்த, இந்த இரண்டு நாள் ஒற்றுமை அணிவகுப்பு கோலாலம்பூர் 2024 நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக உலக புகழ் பெற்ற டிராகன் மற்றும் லயன் நடனம் ஆகியவற்றுடன் இந்த அணிவகுப்பு இருக்கும்.
அத்தோடு 3.6 கிலோமீட்டர் நடைப்பயணத்தை உள்ளடக்கிய இந்த அணிவகுப்பில் பல்வேறு மத, இன, கலாச்சார, கலை மற்றும் இசைக் குழுக்களின் பங்கேற்பையும் உள்ளடக்கியதாக அதன் திட்ட இயக்குநர் நோரிசான் அப்துல் மஜிட் தெரிவித்தார்.
“இந்த அணிவகுப்பு கலை மற்றும் கலாச்சாரத்தின் பல்வேறு தனித்துவமான கூறுகளை உள்ளடக்கியது, கலாச்சார நிகழ்ச்சிகள், பாரம்பரிய உடைகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் என்பன இந்த அணிவகுப்பில் இடம்பிடிக்கும் ,” என்று அவர் நேற்று நடந்த ஓர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையைப் பாதுகாப்பதில் மலேசியர்கள் பங்கு வகிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுத்த அழைப்பை ஏற்று, இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்று நோரிசான் கூறினார்.
“இந்த நிகழ்வு ஒற்றுமை உணர்வை வளர்ப்பது மற்றும் வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், ஒரு தேசிய அடையாளத்தை கட்டியெழுப்பவும், தேசபக்தியை வளர்க்கவும், உள்ளூர் சமூகங்களுக்கிடையில் உறவை வலுப்படுத்தவும் உதவும். பல்வேறு இனங்களின் பங்கேற்பு மிகவும் உற்சாகமான மற்றும் இணக்கமான சமூகத்தை உருவாக்கும்” என்று அவர் சொன்னான்.
மேலும் இந்த கோலாலம்பூர் ஒற்றுமை அணிவகுப்பு 2024 திட்டத்தை கூட்டாட்சி மற்றும் தலைநகரில் சுற்றுலாவை மேம்படுத்தும் ஒரு நிகழ்வாக மாற்ற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் unityparade.my என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அவர் மேலும் கூறினார்.