பெயர் தெரியாத கோழைகளே… விமர்சனங்களுக்கு திரிஷா பதிலடி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம், உலகம் முழுவதும் நேற்று முன்தினம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுக்கும் அதேவேளையில், எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்து வருகிறது. குறிப்பாக திரிஷாவின் கதாபாத்திரத்தை விமர்சித்து கருத்துகளை சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.

இதற்கு திரிஷா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், ”விஷத்தன்மை கொண்ட நபர்களே… நீங்கள் எல்லாம் எப்படி வாழ்க்கையை வாழ்கிறீர்கள்? எப்படி நன்றாக தூங்குகிறீர்கள்?

சமூக வலைதளங்களில் மற்றவர்களைப் பற்றி அர்த்தமற்றவற்றைப் பதிவிடுவது உங்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறதா?

உங்களுக்காகவும், உங்களுடன் வாழும் நபர்களுக்காகவும் உண்மையில் மிகவும் வருத்தப்படுகிறேன். பெயர் தெரியாத கோழைகளே… கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக…” என்று குறிப்பிட்டுள்ளார்.

திரிஷாவின் இந்த கருத்தை திரையுலகினரும், ரசிகர்களும் வரவேற்று ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here