மணிலா:
பிலிப்பைன்சின் தென்பகுதியில் இன்று புதன்கிழமை (ஏப்ரல் 16) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6ஆக நிலநடுக்கம் பதிவானது.
இந்த நிலநடுக்கம் மிண்டனாவ் தீவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் 30 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்தது.
அதேநேரம் மைட்டும் நகரிலிருந்து 43 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மலைப்பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் எரிமலை, நிலநடுக்க ஆய்வகம் தெரிவித்தது. மேலும் அவ்விடத்தில் மக்கள் தொகை மிகவும் குறைவு என்று அறியப்படுகிறது.
“நிலநடுக்கம் சக்திவாய்ந்ததாக இருந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை. சிறிது நேரத்திலேயே முடிவுக்கு வந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மிகவும் குறைவு. யாருக்கும் காயம் ஏற்படவில்லை,” என்று மைட்டும் நகரின் தீயணைப்புத்துறை அதிகாரி கில்பர்ட் ரொலிஃபோர் கூறினார்.





















