புதுச்சேரி:
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “நான் நினைத்திருந்தால் விஜய்யுடன் போவதற்குக்கூட கதவு திறந்திருக்கிறது என்று சொல்லலாம். அந்தக் கதவையும் நான் மூடினேன்,” எனக் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசினார்.
“ஒரே நேரத்தில் இரண்டு அணிகளோடு பேசிக்கொண்டு இருப்பது ராஜதந்திரம். நான் பாமகவோடு சேரமாட்டேன். பாஜகவுடனும் சேர மாட்டேன். அந்தக் கட்சிகள் இடம்பெறும் கூட்டணியிலும் சேரமாட்டோம். இதனால் எந்த பாதிப்பு வந்தாலும் ‘ஐ டோன்ட் கேர்’. அதைப் பற்றி நான் கவலைப்படமாட்டேன். எனக்குப் பதவி தான் முக்கியம் என்று சொன்னால், இப்படி எல்லாம் பேச முடியுமா?
“புதிதாக கட்சி தொடங்கியிருக்கிற நடிகர் விஜய்கூட, புத்தக வெளியீட்டு விழாவுக்கு வரும்படி, அழைப்பு விடுத்தபோதும், அது தவறான ஊகத்தை உருவாக்கிவிடக்கூடாது, நாம் இருக்கிற அணிக்குக் குழப்பத்தை ஏற்படுத்திவிடக்கூடாது,” என் அதை மறுத்தார்.
“அவர் (விஜய்) கூட சொன்னார், அண்ணன் வரவில்லை ஆனால் அவர் மனது நம்ம கூட இருக்கும் என்றார். நான் நினைத்திருந்தால் விஜய்யுடன் போவதற்குக்கூட கதவு திறந்து இருக்கிறது என்று சொல்லலாம். அந்தக் கதவையும் நான் மூடினேன். பாஜக தலைமையிலான அணி, அதையும் மூடினேன்,” என்றார் திருமாவளவன்.




















