கோத்தா கினபாலு,
பகாங் மாநில அரசின் உயரிய விருதைப் பெற்று தருவதாகக் கூறி ஆடவர் ஒருவரிடம் 6,000 வெள்ளியை ஏமாற்றியதாகக் கூறப்படும் டத்தோ அந்தஸ்து கொண்ட தொழிலதிபர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.
40 வயது மதிக்கத்தக்க அந்த சந்தேக நபர், இன்று மதியம் 12.00 மணியளவில் சபா MACC அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டார்.
பகாங் மாநிலத்திலிருந்து ‘டத்தோ’ விருதைப் பெறுவதற்கு புகார்தாரருக்கு உதவ சந்தேக நபர் கடந்த 2023 ஆம் ஆண்டில் முன்வந்தது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.
அவ்வாறு விருதைப் பெற்றுத் தருவதற்கான அதிகாரமோ ஆற்றலோ இல்லாவிட்டாலும் கூட விருது பெறுவதற்குத் தேவையான சடங்கு ஆடை அணிகலன்களை வாங்குவதற்காக 6,000 வெள்ளியை வங்கியில் செலுத்துமாறு புகார்தாரரை சந்தேக நபர் நேர்மையற்ற முறையில் தூண்டியதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை சபா MACC இயக்குநர் டத்தோ எஸ். கருணாநிதி உறுதிப்படுத்தினார். விதிக்கப்பட்ட மொத்த 10,000 வெள்ளி ஜாமீன் தொகையில் 5,000 வெள்ளி ரொக்க வைப்புத் தொகையை செலுத்திய பின்னர் சந்தேக நபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சந்தேக நபர் மீது 2009 ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 16(a)(A) பிரிவின் கீழ் வரும் வியாழக்கிழமை கோத்தா கினாபாலு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.





















