தக் பாய் கார் குண்டுத் தாக்குதல்: தாய்லாந்து பயணத்தை ஒத்திவைக்குமாறு கிளந்தான் மக்களுக்கு போலீஸ் அறிவுரை

தும்பாட்:

ரதிவாட் மாகாணம் தக் பாய் (Tak Bai) பகுதியில் நேற்றிரவு நடந்த கார் குண்டுத் தாக்குதலில் நால்வர் காயமடைந்ததை அடுத்து, தென் தாய்லாந்துக்குச் செல்லும் கிளந்தான் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

சம்பவம் பெங்காலான் குபோர் எல்லைப் பகுதியில் இருந்து மிக அருகில் நடந்ததாகவும், இது கிளந்தான் மக்களால் அடிக்கடி பயன்படுத்தப்படும் எல்லைச் சாவடிகளில் ஒன்றாக இருப்பதாகவும் கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ’ முகமட் யூசுப் மாமட் தெரிவித்தார்.

அவர் மேலும், நரதிவாட், யாலா, பட்டாணி உள்ளிட்ட பகுதிகளில் இடையிடையே குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், மக்கள் அபாயகரமான பகுதிகளை தவிர்க்க வேண்டும் என்றும் நினைவூட்டினார்.

“வார இறுதிகள் மற்றும் நீண்ட விடுமுறைகளில் கிளந்தான் மக்கள் இப்பகுதிகளுக்குச் செல்லுவது சாதாரணமானதாக உள்ளது. போலீசார் அவர்களைத் தடுக்க முடியாது; இருப்பினும் பாதுகாப்பு அபாயங்கள் உள்ள பகுதிகளைத் தவிர்க்குமாறு வலியுறுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், மாநில சுற்றுலா, கலாச்சாரம், கலை மற்றும் பாரம்பரியம் குழுத் தலைவர் டத்தோ’ கமாருடின் முகமட் நோர் கூறுகையில், அண்டை நாட்டுக்குப் பயணம் செய்யும் அனைவரும் தங்களது பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொள்ள வேண்டும் என்றார்.

“தாய்லாந்தில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் புதிதல்ல. நிலைமை இன்னும் பதட்டமாக உள்ளதால், குறிப்பாக வரும் விடுமுறை காலத்தில், மக்கள் தங்கள் பயணத் திட்டங்களை தாமதிப்பதே சிறந்தது. இது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை,” என அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here