கோலாலம்பூர்:
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தாராளமான அலாவுன்ஸ், சிக்கன நடவடிக்கைகள் தொடர்பாக, இந்தோனேசியாவில் நடைபெற்ற, நாடு தழுவிய போராட்டங்களின்போது, பாதுகாப்புப் படையினர், அளவுக்கு அதிகமான முறையில் அத்து மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரணை செய்யுமாறு, ஐக்கிய நாடுகள் சபை (United Nations), இந்தோனேசியாவுக்கு வலியுறுத்தியுள்ளது.இந்த மோதலில் இதுவரை ஆறு பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் பேச்சாளர் ரவினா சம்டசானி (Ravina Shamdasani), மனித உரிமை மீறல்கள் குறித்து, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதுமட்டுமின்றி காவல்துறையும் ராணுவமும், அனைத்துலகக் கொள்கைகளைப் பின்பற்றி, கூட்டங்கள், கருத்துச் சுதந்திரம், ஊடக அறிக்கையிடல் சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.
ஆரம்பத்தில் அமைதியாகத் தொடங்கிய போராட்டங்கள், துணை இராணுவப் படையினர், ஒரு உணவு விநியோக ஓட்டுநர் மீது, வாகனத்தை ஏற்றிய காணொளி வெளியான பிறகு, வன்முறை மோதல்களாக மாறின. ஒரு வருடத்திற்கும் குறைவாகவே, அதிபர் பிரபோவோ சுபியான்டோ (Prabowo Subianto) பதவியேற்ற பிறகு, இதுவே, முதல்முறையாக நடைபெறும் மிக மோசமான வன்முறைச் சம்பவம் ஆகும்.





















