சிம்லா –
பசுவின் வயிற்றிலிருந்து 28 கிலோ நெகிழிக் கழிவுகள், 41 உலோக ஆணிகள் உள்ளிட்ட பலவிதமான பொருட்களை அகற்றி அதன் உயிரைக் காப்பாற்றியுள்ளனர் இமாச்சலப் பிரதேச மருத்துவர்கள்.
ஊனா மாவட்ட கால்நடை மருத்துவமனையில் இந்த அதிரடியான அறுவை சிகிச்சை நடைபெற்றது.
கால்ருஹி கிராமத்தைச் சேர்ந்த விபின் குமார் என்பவரின் பசு, பல நாள்களாக தீவனத்தைத் தொடாமல், தண்ணீரும் அருந்தாமல் தவித்ததை கவனித்த அவர், கவலைக்கிடமாக அதை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
முதற்கட்ட பரிசோதனையில் பசுவின் வயிற்றுக்குள் இயற்கைக்கு மாறான பொருள்கள் உள்ளன என சந்தேகித்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
அதில் நெகிழிப் பொருட்கள், துணிகள், கயிறுகள், பலவிதமான உலோகத் துண்டுகள் மற்றும் 41 உலோக ஆணிகள் என மொத்தம் 28 கிலோ பொருட்கள் அகற்றப்பட்டன.
தற்போது அந்தப் பசு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக சிகிச்சை செய்த மருத்துவர் டாக்டர் நிஷாந்த் ரனௌத் தெரிவித்துள்ளார்.


















