அலோர் ஸ்டார்:
இன்று மாலை 6 மணி தொடங்கி பெய்த கன மழையின் காரணமாக கெடா மாநிலத்தில் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
குறிப்பாக குபாங் பாசு மாவட்டதில் நீர் மட்டம் உயர்ந்த போதிலும் நிலைமை இன்னும் கட்டுபாட்டில் உள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனாலும் இன்னும் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. ஒரு வேளை மழை தொடர்ந்தால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் எனவும் நம்பப்படுகிறது.
இந்நிலையில் கம்போங் மாலாவ், போக்கோ செனா பகுதிகளில் சில வீடுகள் என குபாங் பாசு மாவட்டத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தமது தரப்பிற்கு தகவல் கிடைத்தது என்று கெடா தீயணைப்பு- மீட்பு படையின் முதல் வட்டார தலைவர் அகமட் அமினுடின் தெரிவித்தார்.
இப்போதைக்கு அந்த பகுதிகளில் உள்ளவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளோம். மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதே சமயம் கோத்தா செத்தார் மாவட்டத்திலும் கன மழை என தகவல் தெரிவிக்கப்பட்டாலும் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அழைப்பு ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
ஆனாலும் ஸோன் 1 அதாவது குபாங் பாசு, கோத்தா செத்தார், பாடாங் தெராப் ஆகிய மாவட்டங்களில் தீயணைப்பு- மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் என்றார் அவர்.



















