பத்து பாகாட்,
நேற்று வீசிய புயல், பலத்த காற்றால் ஜோகூரில் சுமார் 56 வீடுகள் சேதமடைந்துள்ளதாக நம்பப்படுகின்றது.
அதிலும் பத்து பாகாட்டில் அதிக எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக வீட்டுக் கூரைகள் மட்டுமன்றி அங்காடி உணவுக் கடைகளும் இச்சம்பவத்தில் சேதமடைந்தன என ஜோகூர் வீடமைப்பு, ஊராட்சித்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ முகமட் ஜஃப்னி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இதுவரை 28 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 15 சம்பவங்கள் பத்து பாகாட்டிலும் 12 சம்பவங்கள் தொங்காக் பெச்சாவிலும் ஒரு சம்பவம் பாரிட் ராஜா பகுதியிலும் நிகழ்ந்துள்ளன.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்படவில்லை என்றார் அவர்.
இந்நிலையில் நேற்று மாலை வீசிய புயலால் சிம்பாங் ரெங்காம், கம்போங் பிங்கீர் பகுதியில் இரண்டு வீடுகள் சேதமடைந்தன என்று ஜொகூர் பொது பாதுகாப்பு படை இயக்குனர் ஜொகூர் கமால் சொன்னார்.
அதே வேளையில் தமது தரப்புக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைக்க பெற்றதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதாகவும் மலேசிய வானிலை மைய நடவடிக்கை பிரிவு துணை தலைமை இயக்குனர் அம்போங் டிண்டாங் சொன்னார்.
செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கிய பருவக் காற்று மாற்றத்தினால் இந்த சம்பவங்கள் வழக்கமாக ஏற்படும் என்றார் அவர்.























