சிப்பாங்:
காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் நோக்கில் குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா (Global Sumud Flotilla) முயற்சியில் பங்கேற்ற 23 மலேசிய தன்னார்வலர்கள், இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டு, இன்று இரவு பாதுகாப்பாக தாயகம் திரும்பினர்.
துபாயில் இருந்து புறப்பட்டு தன்னார்வலர்கள் குழுவை ஏற்றிச் சென்ற எமிரேட்ஸ் இகே342 விமானம், இரவு 10.07 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய (KLIA) முனையம் 1இல் தரையிறங்கியது.
விமான நிலையத்தில், வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மது ஹசான் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் ஆகியோருடன் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் புடைசூழ தன்னார்வலர்களை அனைவரும் ஆர்வமுடன் வரவேற்றனர்.



















