கூலிமில் அதிர்ச்சி சம்பவம்: தாய், மகள் உயிரிழப்பு – கொலை, தற்கொலை என போலீஸ் விசாரணை

கூலிம்:

கூலிம் மாவட்டத்தில் உள்ள தாமான் பேராக் பகுதியில் நேற்று இரவு ஒரு வீட்டில் தாய் மற்றும் சிறுமி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதிகாலை 12 மணியளவில் போலீசார் சம்பவ இடத்தை அடைந்தபோது, 30 வயதான தொழிற்சாலை பெண் பணியாளர் ஒருவரின் உடல் வீட்டு உள்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அருகிலிருந்த மெத்தையில் அவரது 4 வயது மகள் உயிரிழந்த நிலையில் இருந்தார் என்று, கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரிண்டண்ட் சுல்கிப்லி அசிசான் தெரிவித்தார்.

அந்த பெண்ணின் 7 வயது மகன் மட்டும் உயிர் தப்பியுள்ளார். ஆனால், அவரது கழுத்து மற்றும் தாடையில் காயங்கள் இருந்ததாகவும் போலீசார் கூறினர்.

முதற்கட்ட விசாரணையில், காதல் அல்லது குடும்ப தகராறால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக அந்த பெண் தன் இரு குழந்தைகளையும் கொல்ல முயன்று பின்னர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அந்த சிறுவன் வீட்டில் இருந்து தப்பித்து வெளியில் வந்து உதவி கோரியபோது அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

வீட்டின் உட்பகுதியில் இரண்டு கையெழுத்து குறிப்புகள் (suicide notes) மீட்கப்பட்டுள்ளன. அதில், அவர் தன் உயிரை மாய்த்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், மன்னிப்பு கோரியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தாய் மற்றும் குழந்தைகளின் அடையாள ஆவணங்களும் அதனருகில் இருந்தன.

போலீஸ் புலனாய்வின் அடிப்படையில், வீட்டில் வேறு யாராவது உள்நுழைந்ததுபோன்ற தடயங்கள் எதுவும் இல்லாதது உறுதி செய்யப்பட்டது. மரணமடைந்தவர்களின் உடலில் கழுத்து நெறித்த காயங்கள் தவிர வேறு எந்த காயங்களும் காணப்படவில்லை என கூறப்பட்டது.

உயிரிழந்த தாய், மகளின் உடல்கள் அலோர் ஸ்டார் சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உயிர் தப்பிய சிறுவன் கூலிம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பிரிவு 302 (கொலை) மற்றும் 307 (கொலை முயற்சி) பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here