ஷம்சுல், ஆல்பர்ட் தெய் ஆகியோர் ஆறு நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு

புத்ராஜெயா:

பிரதமர் தரப்புடன் தொடர்புடைய முக்கிய வழக்கில், நேற்று வியாழக்கிழமை காலை தொழிலதிபர் ஆல்பர்ட் தெய் மற்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவர்களின் முன்னாள் மூத்த அதிகாரியான ஷம்சுல் இஸ்கந்தர் அகின் ஆகியோர் புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இருவரும் ரிமாண்ட் விண்ணப்பத்திற்காக நீதிமன்றத்தில் தனித்தனியாக அழைத்து வரப்பட்டனர். கைகள் விலங்கிடப்பட்டு, ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) கைதிகளுக்கான ஆரஞ்சு நிற உடை அணிந்திருந்தனர். நீதிமன்றத்தை நோக்கி ஷம்சுல் அமைதியாக நடந்து சென்ற நிலையில், ஆல்பர்ட் தெய் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் சத்தமாக பேசினார்.

“உயர் தலைவர்களுக்கு எதிராகச் செல்வதன் விளைவுதான் இது. மிகவும் உயர்ந்த ஒருவரின் தவறுகளை யார் வெளிச்சத்துக்கு கொண்டு வர முன்வருவார்கள்? இது இந்த நாட்டிற்கு ஒரு அவமானம்,” என்று அவர் கூறினார். அவரது இந்தக் கூற்று, நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து விசாரணை அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட காரணங்களை பரிசீலித்த நீதிமன்றம், ஷம்சுல் மற்றும் ஆல்பர்ட் தெய் இருவரையும் ஆறு நாட்கள் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்த ரிமாண்ட் காலத்தில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விவரங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின் தன்மை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தையும், ஊடகங்களில் தீவிர விவாதத்தையும் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here