ஜார்ஜ்டவுன்:
இன்று அதிகாலை மவுண்ட் எர்ஸ்கைன் சாலையில் 7 பெண் தொழிலாளர்களோடு பயணித்த ஒரு தொழிற்சாலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்தார், ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் காலை 5.59 மணிக்கு தனது குழுவினருக்கு அவசர அழைப்பு வந்தது என்றும், உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், தொழிற்சாலை வேனில் இருந்த எட்டு பேரில் நான்கு பேர் வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கியிருப்பதைக் கண்டனர் என்று, பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் தீயணைப்பு, மீட்புப் பிரிவு உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் கூறினார்.
இதில் வேனின் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, அத்தோடு கடுமையாக காயமடைந்த ஆறு பெண்களும் 21 முதல் 52 வயதுக்குட்பட்டவர்கள் என்று அவர் சொன்னார்.
காலை 7.17 மணிக்கு அனைவரும் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டனர் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அவர் கூறினார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அவரின் உடல் பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மேலும் ஏழு பேர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.





















