கோலாலம்பூர்:
கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள் சமூக அமைதியை பாதிப்பதோடு, இன நல்லிணக்கத்தை குலைக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தக்கூடும் என கல்வி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் நிலவும் பல்துறை மதிப்புகளுக்கு மதிப்பு கொடுத்து, மதம், கலாச்சாரம் மற்றும் சமூக அடையாளம் தொடர்பான விடயங்கள் மிகவும் பொறுப்புடனும், கவனத்துடனும் அணுகப்பட வேண்டும் என அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் “தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலைகள் அகற்ற உத்தரவு” வழங்கப்பட்டதாக வெளியான தகவல்களைத் தெளிவாக மறுக்கும் வகையில், ஜொகூர் மாநில கல்வித் துறை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. பள்ளி நிர்வாகங்களுக்கு சிலைகள் அகற்றுமாறு எந்த உத்தரவோ, கடிதமோ, அல்லது வழிகாட்டலோ வழங்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பரவிய பின்னர், பொய்ச் செய்திகள் அதிகரித்து குழப்பம் ஏற்பட்ட நிலையில், கல்வி அமைச்சகம் உடனடியாக விளக்கம் அளித்து, மக்களிடையே ஏற்படும் தவறான புரிதல்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி திரு. தியாகராஜ் சங்கர நாராயனன், சமூகத்தில் அமைதியையும் ஒற்றுமையையும் பாதிக்கும் வகையிலான தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். அதிகாரப்பூர்வ ஆதாரங்களை உறுதி செய்த பின்னரே செய்திகளை பகிர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.




















