பத்மநாபசுவாமி கோயில்: ‘ஸ்மார்ட்’ கண்ணாடி மூலம் ரகசிய வீடியோ எடுத்த சிங்கப்பூர்வாசி சிக்கினார்!

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலுக்குள், கேமரா பொருத்தப்பட்ட ‘ஸ்மார்ட்’ கண்ணாடியைப் பயன்படுத்தி ரகசியமாக வீடியோ எடுத்ததாகச் சிங்கப்பூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 20) காலை சுமார் 9:25 மணியளவில், சிங்கப்பூர் தேசியவாசியான திருநீபனர் (49) என்பவர் கோயிலுக்குள் நுழைந்தார். கோயிலின் வடக்கு கோபுரம் மற்றும் துலாபாரம் நடைபெறும் மண்டபம் ஆகிய பகுதிகளை அவர் தனது கண்ணாடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார்.

அவரது கண்ணாடியின் அசாதாரணத் தன்மையைக் கவனித்த கோயில் பாதுகாப்புப் படையினர், உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டனர். அதில் கேமரா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இவர் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் குடிமகன் ஆவார் (சிங்கப்பூரின் புங்கோல் நார்த்ஷோர் பகுதியில் வசிப்பவர்). கேரளாவிற்குச் சுற்றுலாப் பயணியாக வந்துள்ளார்.

அதிகாரிகளின் சட்டபூர்வ உத்தரவுக்குக் கீழ்ப்படியாதது தொடர்பான பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 223-இன் கீழ் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணையைத் தொடர்ந்து, மறுநாள் காலை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நோட்டீஸுடன் அவர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பத்மநாபசுவாமி கோயில் உலகின் மிகப்பெரிய செல்வம் கொண்ட கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்குப் பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் மிகவும் கடுமையானவை. மேலும் மொபைல் போன்கள், கேமராக்கள் மற்றும் எந்தவொரு மின்னணு சாதனங்களும் கோயிலுக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை. கருவறை மற்றும் கோயில் வளாகத்திற்குள் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here