லஞ்ச ஊழல் அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஜசெக தொடர்ந்து உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்று ஜசெக தலைவரும் டாமன்சாரா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் டிஜிட்டல் துறை அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ நேற்றுக் கூறினார்.
1எம்டிபி ஊழல் முதன்முதலில் அம்பலமானபோது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினருடன் சேர்ந்து ஜசெக போராடி வந்திருக்கிறது. அரசியல் தலைவர்களும் பொதுநலத்தொண்டர்களும் சாதாரண மக்களும் மேலும் பலரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர் என அவர் சொன்னார்.
இந்தப் போராட்டத்தில் சிலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். சிலர் நீதிமன்ற நடவடிக்கையைச் சந்தித்தனர். அது மிகவும் சிரமமானதாக இருந்தது. ஊழல் பிரச்சினைகளில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக நிறைய பேர் நிறைய வலிகளையும் சோதனைகளையும் சந்தித்தனர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என அவர் குறிப்பிடார்.





















