பள்ளிகளில் 28 விழுக்காடு CCTV கேமராக்கள் மட்டுமே இயங்குகின்றன: அமைச்சர் ஃபட்லினா தகவல்!

கோலாலம்பூர்:

பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது பெற்றோர் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு மிகவும் முக்கியமானது என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் (முழு நேர விடுதிப் பள்ளிகள் மற்றும் சாதாரணப் பள்ளிகள் உட்பட) உள்ள CCTV கேமராக்களில் 28 சதவீதம் மட்டுமே செயல்படுகின்றன. “பாதுகாப்பு என்பது பெற்றோரின் நம்பிக்கையுடன் தொடர்புடையது. எனவே, பழுதடைந்துள்ள கேமராக்களைச் சரிசெய்வது எங்களின் பொறுப்பு,” என்று அவர் தனது 2026 புத்தாண்டு உரை நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

மேலும் பழுதடைந்த கேமராக்களைச் சரிசெய்யக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான நிதியைக் கல்வி அமைச்சு வழங்கும் என்றும் அவர் சொன்னார்.

சில பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் (PIBG) மற்றும் தனியார் துறையினரின் உதவியுடன் கேமராக்கள் சரிசெய்யப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் கூடுதலாக 300 புதிய CCTV கேமராக்கள் பொருத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here