கோலாலம்பூர்:
நாடு முழுவதும் உள்ள 5.2 மில்லியன் (52 லட்சம்) பள்ளி மாணவர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில், RM800 மில்லியன் பள்ளித் தொடக்கக்கால உதவித் தொகையை (BAP) கல்வி அமைச்சு அங்கீகரித்துள்ளது.
புதிய கல்வி ஆண்டு தொடங்கும்போது சீருடைகள், காலணிகள் மற்றும் எழுதுபொருட்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகளை வாங்கப் பெற்றோர்களுக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாணவருக்கும் தலா RM150 வழங்கப்படுகிறது.
இந்த நிதி வங்கி கணக்குகளில் செலுத்தப்படாமல், நேரடியாக மாணவர்களிடமே பணமாக வழங்கப்படுகிறது. “அரசாங்கம் தங்கள் கல்விக்கு ஆதரவாக இருப்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இந்த முறை பின்பற்றப்படுகிறது,” என்று கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் அமினுடின் ஹாசிம் தெரிவித்தார்.
மேலும் லாபுவானில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 19,001 மாணவர்கள் இந்த உதவியைப் பெறுகின்றனர். இதற்காக மட்டும் RM2.7 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
பள்ளித் தொடக்கக்கால உதவித் தொகை (BAP) என்பது கல்வி அமைச்சு வழங்கி வரும் 18 வகையான உதவித் திட்டங்களில் ஒன்றாகும்.




















