கோலாலம்பூர், பிப்ரவரி 10, 2026:
மலேசியாவில் ஹரி ராயா ஐடில்பித்ரி பண்டிகைக் காலத்திற்கான ஈடிஎஸ் ரயில் டிக்கெட்டுகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
மார்ச் 13 முதல் மார்ச் 29 வரையிலான பயணக் காலத்திற்காக மொத்தம் 224,196 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இன்று (பிப். 10) வரை 118,823 டிக்கெட்டுகள் (53%) விற்பனையாகியுள்ளன.
தற்போதுள்ள டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்த பின்னரே, ஹரி ராயாவுக்கான கூடுதல் டிக்கெட்டுகள் குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
தற்போது நெருங்கி வரும் சீனப் புத்தாண்டுக்காக (பிப். 13 – பிப். 22) பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யப் பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:
சீனப் புத்தாண்டுக்காக மொத்தம் 46,404 கூடுதல் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 426% அதிகமாகும். KL Sentral – JB Sentral வழித்தடத்திற்கான 12,600 கூடுதல் டிக்கெட்டுகள் பிப்ரவரி 11 (நாளை) நள்ளிரவு 12:15 மணி முதல் விற்பனைக்கு வரும்.
புதிதாக அங்கீகரிக்கப்பட்ட 7-வது ETS3 ரயில் பெட்டிகள் பயன்பாட்டுக்கு வருவதால் இந்த கூடுதல் இடங்கள் சாத்தியமாகியுள்ளன. இந்த சீனப் புத்தாண்டின் சிறப்பம்சமாக, EMU Plus என்ற புதிய சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது: இது கேஎல் சென்ட்ரல் – ஈப்போ – கேஎல் சென்ட்ரல் வழித்தடத்தில் இயங்கும்.
பிப்ரவரி 13-15 மற்றும் பிப்ரவரி 20-22 ஆகிய தேதிகளில் மொத்தம் 24 கூடுதல் பயணங்களை இது மேற்கொள்ளும்.
இதன் மூலம் 7,344 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, அதில் ஏற்கனவே 43% டிக்கெட்டுகள் விற்றுவிட்டன.
பண்டிகைக் காலங்களில் நிலவும் கடும் தேவையைக் கருத்தில் கொண்டு, 24 மணி நேரமும் ஈடிஎஸ் ரயில்களை இயக்கப் பிளான் செய்துள்ளதாகப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

























