டாக்கா:
வங்காளதேசத்தில் தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவர் தாரிக் ரஹ்மான், நாட்டின் புதிய பிரதமராக செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) முறைப்படி பதவியேற்றார்.
தலைநகர் டாக்காவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கோலாகலமான விழாவில், அதிபர் முகம்மது ஷகாபுதின் புதிய பிரதமருக்குப் பதவியேற்பு உறுதிமொழி போதித்தார்.
தேர்தல் முடிவுகள் மற்றும் வெற்றி விவரம்:
வங்காளதேசத்தில் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது.
மொத்தமுள்ள 297 இடங்களில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான தேசியவாதக் கட்சி 209 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.
மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான இடங்களை வென்று அக்கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக 60 வயதான தாரிக் ரஹ்மான் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரதமராகப் பதவியேற்ற அவருடன், 25 அமைச்சர்களும் 24 இணை அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். இவர்களுக்கும் அதிபர் ஷகாபுதின் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.





















