சிரம்பான், பிப்ரவரி 18, 2026:
தனது ஊழியர்களுடன் இரண்டு மேஜைகளில் அமர்ந்து உணவு அருந்திய தமக்கு, உணவக ஊழியர்கள் RM120 பில் போட்டதாகவும், பின்னர் அது வெறும் RM70 தான் எனத் தெரியவந்ததாகவும் வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சுமார் 5 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில், தான் முதலில் செலுத்திய RM120 தொகையை மீண்டும் கணக்கிடுமாறு (Recalculate) ஊழியரிடம் கேட்டபோது, அவர் மறுத்ததாக அந்த நபர் கூறியுள்ளார்.
ஊழியரின் மறுப்பைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து விலையைச் சரிபார்த்தபோது, உண்மையான பில் தொகை சுமார் RM70 மட்டுமே என்பது தெரியவந்தது.
அந்த உணவகத்தில் முறையான விலைப்பட்டியல் (Price Tag) ஒட்டப்படவில்லை என்றும், வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாகவும் (“slaughtering” customers) அவர் ஆவேசமாகக் குற்றம் சாட்டினார்.
வீடியோவின் இறுதியில் நிலைமை கையை மீறிச் சென்றபோது, காவல்துறையினர் அங்கு வந்து சமாதானம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இச்சம்பவம் குறித்து நெகிரி செம்பிலான் உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சின் (KPDN) இயக்குநர் முகமது ஜாஹிர் மஸ்லான் விளக்கம் அளித்துள்ளார்:
அதிகாரிகள் நடத்திய ஆய்வில், உணவகத்தில் விலைப்பட்டியல் வாடிக்கையாளர்களுக்குத் தெரியும் வகையில் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
விற்பனை ரசீதுகள் மற்றும் சிஸ்டத்தில் உள்ள விலைகள் மெனுவுடன் ஒத்துப்போகின்றன.
இருப்பினும், ரொட்டி செனாய் மற்றும் ரோட்டி தெலூர் ஆகியவற்றுக்கான விலை விவரங்களைச் சரிபார்க்க உணவகத்திற்கு ‘தகவல் சரிபார்ப்பு நோட்டீஸ்’ (Goods Information Verification Notice) வழங்கப்பட்டுள்ளது. 4 நாட்களுக்குள் இதற்கு விளக்கம் அளிக்க உணவகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாசி கண்டார் உணவகங்களில் சாப்பிடும்போது, தட்டில் போடப்படும் ஒவ்வொரு கறி மற்றும் உணவு வகைகளுக்கும் தனித்தனியே விலை வசூலிக்கப்படும். எனவே, வாடிக்கையாளர்கள் உணவு வாங்கும்போதே விலையைச் சரிபார்ப்பது நல்லது.





















