கோலாலம்பூர், பிப் 25:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC/SPRM) தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, வரும் வெள்ளிக்கிழமை புத்ராஜெயாவில் உள்ள ஆணையத்தின் தலைமையகத்திற்கு முன்னால் மாபெரும் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
இந்த எதிர்ப்புப் பேரணி காலை 10:00 மணிக்கு எஸ்பிஆர்எம் (SPRM) தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாகவும், தங்களின் ஒற்றுமையையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் விதமாக பங்கேற்பாளர்கள் அனைவரும் கருப்பு நிற உடை அணியுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாட்டின் முதன்மையான அமலாக்கத்துறை அமைப்பான எஸ்பிஆர்எம், அதன் உண்மையான நோக்கமான ஊழல் ஒழிப்பில் ஈடுபடாமல், முறையான வணிகர்களை மிரட்டவும், நிறுவனங்களை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தவும் ஒரு ‘அழுத்தக் கருவியாக’ பயன்படுத்தப்படுவதாகப் பேரணி ஏற்பாட்டுக் குழுவின் பிரதிநிதி லீ வாய் ஹோங் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று அஸாம் பாக்கி பதவி விலக வேண்டும் என்பதே இப்போராட்டத்தின் பிரதான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.




















