வாடிக்கையாளர் போல நடித்து நகைக்கடையில் கைவரிசை: தெமர்லோவில் RM5,000 மதிப்புள்ள தங்க வளையலுடன் திருடன் தப்பியோட்டம்

கோலாலம்பூர்:

தெமர்லோ, ஜாலான் அஹ்மட் ஷாவில் உள்ள ஒரு நகைக் கடையில், வாடிக்கையாளர் போல நடித்து வந்த நபர் ஒருவர் RM5,000 மதிப்புள்ள தங்க வளையலைத் திருடிக்கொண்டு காரில் தப்பியோடியுள்ளார்.

நேற்று (ஏப்ரல் 27) மதியம் 1 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்துக் கடையின் உரிமையாளர் கமலூல் ஹயாத் ரெஸ்வான் (32) கூறுகையில்: “சந்தேக நபர் கடந்த வாரம் இதே கடைக்கு வந்து அதே வளையலைப் பார்த்திருந்தார். அதனால் அவர் இன்று அந்த நகையை வாங்குவதற்காகவே வந்திருக்கிறார் என்று நினைத்து நான் அவரிடம் வளையலைக் காட்டினேன்.”

“அவர் வளையலை அணிந்து பார்ப்பது போல நடித்தார். சட்டென மின்னல் வேகத்தில் கடையை விட்டு வெளியே ஓடி, அங்கு காத்திருந்த ஒரு கருப்பு நிற ‘புரோடுவா பெசா’ (Perodua Bezza) காரில் ஏறித் தப்பினார். காரில் அவருக்கு உதவியாக மற்றொரு நபர் தயாராக இருந்தார்” என்று அவர் சொன்னார்,

கடை உரிமையாளர் தனது மோட்டார் சைக்கிளில் அந்த காரைத் துரத்திச் சென்றார். இருப்பினும், அந்த கார் தெமர்லோ பாலம் நோக்கி அதிவேகமாகச் சென்று மறைந்தது.

மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமட் நசீம் பஹ்ரோன் கூறுகையில், மதியம் 1.20 மணியளவில் இச்சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தார்.

திருட்டுச் சம்பவம் ஐந்து நிமிடங்களுக்குள்ளேயே முடிந்துவிட்டது. கடையில் இருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் திருடனின் உருவம் பதிவாகியுள்ளது.

இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 380-ன் கீழ் (கட்டிடத்திற்குள் திருடுதல்) விசாரணை செய்யப்படுகிறது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

“ஏற்கனவே ஒருமுறை வந்து நோட்டமிட்டு விட்டு, திட்டமிட்டு இந்தத் திருட்டை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர். சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வருகிறோம்” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here