கோலாலம்பூர்:
அடுத்த பொதுத் தேர்தலில், பண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லிக்கு எதிராகக் களம் இறங்குமாறு கட்சித் தலைமைப் பணித்தால், அதற்குத் தாம் தயாராக இருப்பதாகப் பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கட்சித் தலைமையின் முடிவே இறுதியானது எனக் குறிப்பிட்டுள்ள முன்னாள் நிதியமைச்சருமான அவர், வாய்ப்பளிக்கப்பட்டால் எந்தத் தொகுதியிலும் போட்டியிடத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
“தற்போது காலியாக உள்ள பண்டான் தொகுதியில் நான் அதிக கவனம் செலுத்துவதற்குக் காரணம், அங்குள்ள மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதற்காக மட்டுமே. அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் இன்னும் ஆழமாகச் சிந்திக்கவில்லை,” என்றும் அவர் விளக்கமளித்தார்.
அண்மையில் பிகேஆர் கட்சியிலிருந்து விலகி, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்த ரஃபிஸி ரம்லி, பெர்சாமா கட்சியில் இணைந்தார். இதற்கிடையே, பண்டான் தொகுதியைத் தொடர்ந்து பிகேஆர் வசம் தக்கவைத்துக் கொள்ளுமாறு தொகுதித் தலைவர்களுக்குப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



















