கோலாலம்பூர்:
மலேசிய ஆயுதப்படை வீரர்கள் தங்களின் இராணுவ சேவைக்குப் பிறகு, பொதுமக்களுக்கான வேலைகளில் இணைவதற்கு உதவும் வகையில் 3,208 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் (Anthony Loke) தெரிவித்துள்ளார்.
இராணுவ டிரக்கர்களை இயக்கும் வீரர்கள், தங்களின் இராணுவ ஓட்டுநர் உரிமங்களை (Military Licences) கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான ‘கிளாஸ் இ’ (Class E) உரிமமாக நேரடியாக மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு வழக்கமான நடைமுறைகள் தேவையில்லை என்பதால் செலவும், நேரமும் மிச்சமாகும் என்று அவர் கூறினார்.
ஓய்வு பெறுவதற்கு முந்தைய இடைநிலை காலத்தில் (Transition Period) இவர்கள் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களில் பயிற்சி பெறுவார்கள். இந்த பயிற்சி காலத்திலும் பாதுகாப்பு அமைச்சகம் (Mindef) மூலம் அவர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்படும்.
பயிற்சி காலம் முடிந்தவுடன் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டு, தங்களின் மாதாந்திர ஓய்வூதியத்துடன் (Pension) சேர்த்து கூடுதல் சம்பளத்தையும் அவர்கள் பெறுவார்கள்.
இராணுவ வீரர்களிடம் இருக்கும் திறமைகளையும் அனுபவத்தையும் வீணடிக்காமல், எந்தவிதமான தேவையற்ற நிர்வாக தாமதமும் (Bureaucracy) இன்றி அவர்களை உடனே வேலைகளில் அமர்த்துவதே எங்கள் நோக்கம்” என்று, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.




















