ஜோகூர் மாநிலத் தேர்தல்: பிரசார விதிமுறைகளை மீறியதாக 5 நாட்களில் 305 வழக்குகள் பதிவு; தேர்தல் ஆணையம்!

ஜோகூர் பாரு:

16-ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தல் பிரசாரக் காலம் தொடங்கியதில் இருந்து இதுவரை அரசியல் கட்சிகளால் செய்யப்பட்ட 305 பிரசார விதிமீறல்களை மலேசிய தேர்தல் ஆணையம் (EC) பதிவு செய்துள்ளது.

கடந்த ஜூன் 27 வேட்புமனுத் தாக்கல் நாள் முதல் ஜூலை 2-ஆம் தேதி வரையிலான 5 நாட்கள் காலக்கட்டத்தில் இந்த விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையச் செயலாளர் டத்தோ கைருல் ஷஹ்ரில் இத்ருஸ் தெரிவித்தார்.

பதிவு செய்யப்பட்ட விதிமீறல்களில்,

தடைசெய்யப்பட்ட இடங்கள்: உள்ளூர் அதிகாரிகளால் (Local authorities) தடைசெய்யப்பட்ட பகுதிகளில் பிரசாரப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட 140 வழக்குகள்.

போக்குவரத்து இடையூறு: வீதியைப் பயன்படுத்துவோர் மற்றும் போக்குவரத்தின் பார்வையை மறைக்கும் வகையில் பிரசாரப் பொருட்கள் வைக்கப்பட்ட 90 வழக்குகள்.

வாக்குச்சாவடிக்கு அருகில்: வாக்குச் சாவடிகளில் இருந்து 50 மீட்டர் சுற்றளவிற்குள் பிரசாரப் பொருட்கள் வைக்கப்பட்ட 27 வழக்குகள்.

இதர குற்றங்கள்: வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட 48 விதிமீறல்கள்.

ஜூலை 10-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை பிரசார நடவடிக்கைகள் தொடரவிருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. ‘1954 தேர்தல் குற்றங்கள் சட்டத்தை’ அமல்படுத்துவதற்காக 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பிரசார அமலாக்கக் குழுக்கள் (PP-KPR) நிறுத்தப்பட்டுள்ளன.

பிரசாரக் களத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில், தேர்தல் ஆணையம் ராயல் மலேசிய காவல்துறை (PDRM), மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) மற்றும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) ஆகிய அமலாக்க முகமைகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது.

பிரசார நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, தேர்தல் ஆணையம் மற்றும் பிற அமலாக்க முகமைகள் பிறப்பித்துள்ள சட்டங்கள், விதிமுறைகள், நெறிமுறைகள் மற்றும் உத்தரவுகளுக்குக் வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் முழுமையாகக் கட்டுப்பட வேண்டும் என்று கைருல் ஷஹ்ரில் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here